Total Pageviews

Thursday, July 19, 2012

ஒரு குரூப்பாய் இருக்கும் சொந்தங்கள்


       
 சொந்த ஊரில் சொந்தபந்தங்களுக்கு நடுவில் வாழப் பழகியிராத பதினோராவது வயது வரை ஜாதி, மதம் பற்றிய எந்த ப்ரக்ஞையும் இருந்ததில்லை. பெற்றோரின் நட்புவட்டங்களையும், அக்கம்பக்கத்து வீட்டாரையும் அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அண்ணன், அக்கா என்று உறவுமுறை சொல்லி அழைத்துக் கொண்டிருந்ததும் அவர்கள் எல்லோருமே நமக்கு உறவினர் என்று நினைத்துக்கொண்டிருந்ததுமான காலம் அது. 

   முதன் முதலில் “அவங்க வேற நம்ம வேற என்ற விழிப்பு (?) வந்தது பள்ளியில் கல்வி உதவித்தொகைக்கு பட்டியலெடுக்க ஆள் வந்தபோதுதான். "வேற வேற ஜாதிக்காரவங்க சொந்தக்காரவங்களா இருக்க முடியாது" என்று அறிவுறுத்தப்பட்டதும் அந்த காலகட்டத்தில் தான். அப்போது ஏற்பட்ட உணர்வுக் குழப்பத்தில் யரைப் பார்த்தாலும் இவங்க நம்ம சொந்தக்காரவங்களா இல்லையா? எனக் கேட்க ஆரம்பித்திருந்தேன். ஆனாலும் அதே உறவுமுறைகள்தான் இன்றுவரைத் தொடர்ந்து கொண்டும் மிகத் தொலைவில் இருக்கும் உறவினர்களின் வெற்றிடத்தை எப்போதும் நிரப்பிக் கொண்டுமிருக்கின்றன. 
     
   இன்று தெருவுக்குத் தெரு பேனர்களிலும், போஸ்டர்களிலும் முகம் காட்டிக்கொண்டிருக்கும் ஜாதிவாரி 'சொந்தங்களிலும்', 'பாய்ஸ்களிலும்', 'க்ரூப்புகளிலும்' நாம் உறவுமுறை கொண்டாடியவர்களின் பிள்ளைகள் முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகவும் நிறையப் பயமாகவும் இருக்கிறது. "நாங்க இன்ன குரூப்!!!!!!!"-பென்று ஒரு அடையாளத்தைச் சுமந்துகொண்டிருப்பவர்களிடம் முன்னெப்போதும் போல எதையும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இறுக்கமான புன்னகையைத் தவிர.