Total Pageviews

Wednesday, August 28, 2013

கை மணம் மண்மணம் சமணம்

மதுரையில் நடந்த விருட்சத் திருவிழா மலைகளுக்கான விழா, குழந்தைகளுக்கான விழா என்பதையும் தாண்டி குடும்பங்களுக்கான விழாவாகவும் இருந்தது.

நிகழ்வில் வெளியிடப்பட்ட “மதுர வரலாறு” நூலைப் பெற்றுக் கொண்டவர் செட்டிப்புடவு மலையடிவாரத்தில் பதினைந்து வருடங்களாக பருத்திப்பால் விற்கும் ”ஜெயமணி அம்மாள்” என்பதே நிகழ்வின் சிறப்புக்குச் சான்று.

பிரம்மாண்டக் குடையாய் விரிந்த ஆலமர நிழலில் நிகழ்வரங்கம். அருகே தாமரைப் பூத்த தடாகம், சுறுசுறுப்பான தன்னார்வலர்கள், இயற்கை உணவு, கிட்டிப்புள், பரமபதம், பம்பரம், பல்லாங்குழி, கலைடாஸ்கோப் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பரிசுகள், ஓரிகமி, க்ளே மாடலிங், படம் வரைதல், கட்டுரை, செய்கைப் பாடல்கள் முதலிய செயல்பாடுகள், நடமாடும் கழிவறை என அனைத்து ஏற்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

நிகழ்வு நடந்த நேரம் முழுதும் சமர்த்தாகத் தூங்கி, நிகழ்வு முடிந்த பிறகுக் கண்விழித்து நடந்து, ஓடி, விளையாடித் தனது முழு ஒத்துழைப்பையும் நல்கிய ”அனன்யா”  பசுமை நடைக் குழுவின் இளைய அங்கத்தினர்.

எந்த ஒரு நிகழ்வின் வெற்றியும் அதற்கான திட்டமிடுதலையும் அதைச் செயல்படுத்துபவர்களையும் சார்ந்தே அமைகிறது. அதற்கு விருட்சத் திருவிழா ஒரு உதாரணம். விழா முடிந்த பிறகு நடந்த தன்னார்வலர் கூட்டத்தின்போது அனைவருக்கும் வழங்கப்பட்ட பருத்திப் பாலில் ஜெயமணி அம்மாளின் கைமணமும், மதுர மண் மணமும் 



Thursday, March 28, 2013

ஏழாம் வகுப்புத் துக்கம்



அப்போது ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஜூலை மாதத்தின் ஒரு நாள் பள்ளி விட்டு வீடு வந்தபோது அம்மா காட்டாஸ்பத்திரிக்கு (லியோனார்டு மருத்துவமனை) போயிருப்பதாகச் சொன்னார்கள், ஹேமஸ்ரீ, பேரன்பு தமிழன், அவனது அம்மா காயத்ரி ஆகியோர் பிறந்ததும் அங்குதான்.. தம்பிப் பாப்பாவோ தங்கச்சி பாப்பாவோ பிறக்கப் போகிறதென்று புரிந்தது.  கையில் இருந்த பத்துப் பைசாவை வைத்துக்கொண்டு வரப்போகும் பாப்பாவுக்கு என்ன வாங்கித் தருவது என்று தெரியவில்லை. யூனிஃபார்மைக் கூட மாற்றாமல் அப்படியே காட்டாஸ்பத்திரிக்கு ஓடினேன். நடு இரவில் சற்றே நீலநிறத்திலிருந்த குட்டிப்பாப்பாவை அவசர அவசரமாய்க் கண்ணீல் காட்டிவிட்டு உடனே வேறொரு அறைக்குள் கொண்டுபோய்விட்டனர். பிறகு பத்து நாட்கள் கழித்து நானும் அம்மாவும் குட்டிப் பாப்பாவுடன் வீட்டுக்கு வந்தோம். அடிக்கடி மூச்சுத் திணறல் வந்து அவதியுறுவாள் ரேவதிப் பாப்பா.
*************************
அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஃபிப்ரவரி மாதத்தின் ஒரு நாள் மாலை பள்ளி விட்டு வீடு வந்தபோது ரேவதி பாப்பாவுக்கு காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. நானும் அம்மாவும் ரேவதி பாப்பாவைத் தூக்கிக்  கொண்டு அதே காட்டாஸ்பத்திரிக்குப் போனோம். ஏதேதோ கஷ்டமான இங்கிலீஷ் பெயர்களைச் சொன்னார்கள். மதுரை பெரியாஸ்பத்திரிக்குப் போகச் சொன்னார்கள். போனோம்….. இடது கையும், இடது காலும் செயலிழந்த நிலையில் அன்றிரவே அவள் இறந்து விட்டிருந்தாள்.
******************************
     அப்போது எம். எஸ்சி படித்துக் கொண்டிருந்தேன். கவிதா மைதிலி மேடம் உடல் ஊனம் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.  ஸ்பைனா பைஃபைடா (முதுகுத் தண்டு வட அழற்சி) , என்கஃபலைட்டிஸ் (மூளைக் காய்ச்சல்), செரிப்ரல் பால்ஸி (மூளை முடக்குவாதம்) என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. அவை….நான் ஏழாம் வகுப்பு படிக்கையில் காதில் விழுந்த அதே கஷ்டமான இங்கிலீஷ் வார்த்தைகள். அந்த கஷ்டமான இங்கிலீஷ் வார்த்தைகள் காதில் விழும்போதெல்லாம்  அந்த ஏழாம் வகுப்புத் துக்கத்தில் உழல்வது தவிர்க்க முடியாதது. நேற்றிரவிலிருந்து அதே மனநிலை. 
********************************
எனினும் இந்தக் கெடு கெட்ட உலகத்தில் வாழப் பிடிக்காமல் பறந்து போன அனைத்து தேவதைகளின் பாதங்களுக்கும் அன்பு முத்தங்கள் தந்து துடைத்துக் கொள்கிறேன் அந்த ஏழாம் வகுப்பு துக்கத்தை.