Total Pageviews

Friday, December 12, 2014

கெட்ட பய காளி, பத்த வச்ச பரட்டை


அன்புள்ள ரஜினி அங்கிள், 



நான் உங்கள் ரசிகை அல்ல. உங்களுடன் நடித்த நடிகைகளின் கவுன்களுக்கு ரசிகையாய் இருந்தேன். ஆனாலும் தளபதி, அன்புள்ள ரஜினிகாந்த், தம்பிக்கு எந்த ஊரு, நெற்றிக்கண், தில்லுமுல்லு, முள்ளும்மலரும், நினைத்தாலே இனிக்கும், பதினாறு வயதினிலே மூன்று முடிச்சு ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதுவும் அந்த ”கெட்ட பய காளியும், பத்த வச்ச பரட்டையும்”. சான்சே இல்லை அங்கிள். அட அதை விடுங்கள் அங்கிள். நான் சொல்ல வந்தது வேறு.



எனக்கு ஒரு அத்தை மகன் இருக்கிறான். உங்களின் அதி தீவிர ரசிகன். அவன் பெயர் கண்ணன். உங்களுக்காக தன் பெயரையே மாற்றி தன்னைத்தானே  “ரஜினிக்கண்ணன்” அழைத்துக் கொண்டவன். இப்போதும்கூட ஊரே அவனை அப்படித்தான் அழைக்கிறது. உங்கள் மீது கொண்ட வெறித்தனமான பாசத்தாலும், பைத்தியக்காரத்தனமான அன்பினாலும் அடர்த்தியான அவன் முடியை இடது நெற்றியின் மேற்புறம் ஒரு ஓரமாக மழித்துக் கொண்டு அரை வழுக்கையில் (உங்கள் ஸ்டைலில்) அலைவான். உங்களைப் போலவே உடை உடுத்திக்கொண்டு, பேசிக்கொண்டு, ஸ்டைல் எல்லாம் செய்துகொண்டு அப்பப்ப்பப்ப்பா… அவனைப் பார்க்கும்போதெல்லாம் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். எனக்கும் அவனைக் கொஞ்சோண்டு பிடிக்கும் :-P



எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில் எந்த ஊரில் எந்த திருவிழா நடந்தாலும் அங்கே நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் உங்களைப்போலவே நடனமாடிக்கொண்டிருப்பான். உங்களைப்போலவே  உடை உடுத்திக்கொண்டு, உங்களைப்போலவே மேக்கப் போட்டுக்கொண்டு உங்களைப்போலவே காட்டிக்கொள்ள மிகவும் மெனக்கெட்டு, மேடையில் ஆடி அசத்திவிடுவான்.  



”ஒரு மைனா மைனாக்குருவி மனசோடு பாடுது என்று மூன்று பெண்களுடன் சேர்ந்து அவன் ஆடும்போது சற்று பொறாமையாக இருக்கும். ”அத்த மக ராசி! அத ஊர் முழுக்க பேசி! கொட்டு மேளம் கொட்டி வாசி!” என்ற வரிகளுக்கு இருக்கிற அத்தனை அத்தை மகள்களையும் சுட்டிக்காட்டுவான். நாங்களெல்லாம் விசிலடித்து கைதட்டுவோமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரஜினிக் கண்ணனுக்கு என்னைப்போல் எக்கச்சக்க ரசிகைகள். இப்போதும் சொல்கிறேன் குறித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ரசிகை அல்ல.  இப்படி நடனமாட போன இடத்தில் ஒரு பெண்ணை டாவடித்து கல்யாணம் செய்துகொண்டு மதுரைக்குப் பக்கத்தில் செட்டில் ஆகிவிட்டான். முதல் மனைவியும் அவன் பிள்ளைகளும் இதோ அடுத்த தெருவில் தான் இருக்கிறார்கள்.  அவனைக் கடைசியாகப் பார்த்து ஒரு இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்.  



கிடத்தட்ட படையப்பா படத்துக்குப் பிறகு வந்த எல்லாத் திரைப்படங்களிலும்  ரஜினி படத்தில் வருகிற ரஜினி, ரஜினியைப் போலவே இல்லை ரஜினி அங்கிள். ரஜினிக்கண்ணன் போன்ற யாரோ ஒருவர் ரஜினி வேஷம் கட்டி நடிப்பது போலவே தெரிகிறது ரஜினி அங்கிள். என்னத்தைச் சொல்ல. இதோ இந்த லிங்கா படத்து போஸ்டரில்கூட ரஜினிக் கண்ணன் தான் தெரிகிறான் ரஜினி அங்கிள். அந்தப் படத்து விளம்பரத்துல கூட உங்களை மாதிரி யாரோ வேஷம் கட்டி ஆடுகிறார்கள் ரஜினி அங்கிள். ஆனா உங்கள் அசல் ஸ்டைல் அதில் இல்லை அங்கிள். ஆமா அங்கிள். சற்றே தூக்கலான மேக்கப் போட்ட, அடர்த்தியாய் லிப்ஸ்டில் போட்ட , உங்களைப் போலவே விக் வைத்துக்கொண்ட உங்களைப் போலவே ஸ்டைல் காட்டுகிற ”சற்றே வயதான” ரஜினிக் கண்ணன்தான் அங்கிள் அங்கே ஆடுகிறான். அது நீங்கள் இல்லை.



விசாரித்துப் பார்த்தால் அவன் உங்களைப்போல் வேஷம் கட்டி ஆடுவதிலிருந்து ரிட்டையராகி விட்டானாம்.  மதுரைப் பக்கம் பெயிண்ட்டராக இருப்பதாகத் தகவல். எனில் லிங்கா படத்தில் வருவது யார் அங்கிள்? நிச்சயமாக அது நீங்கள் இல்லை. உங்கள் ஸ்டைல் இல்லை. உங்கள் குரல் இல்லை. உங்களைப் போன்ற ஒரு வேஷம். உங்களுடையதைப் போன்ற ஒரு  ஸ்டைல். உங்களுடையதைப் போன்ற ஒரு குரல். உங்களைப் போல் செய்துகொண்ட ஒரு இமிட்டேஷன். உங்களைப்போன்ற ஒரு செயற்கை. அவ்வளவுதான். இதையெல்லாம் சொல்லணும்னு தோணிச்சு ரஜினி அங்கிள்.



அப்புறம் ரஜினி அங்கிள் ஹேப்பி பர்த்த்டே அங்கிள். வாங்க அங்கிள்… நீங்க நான் மீனா அப்புறம் எல்லா ஃப்ரெண்ட்ஸும் போயி விளையாடலாம். ஆனா இந்த முறை நீங்க ஒளிஞ்சுக்குங்க. சரியா?


”ரஜினி அங்கிள்! நீங்க எங்க இருக்கீங்க? எங்க? எங்க? ஹஹஹஹா! ஹஹஹஹா!"