சமீபத்தில் கோழிக்கோட்டில் நடந்த போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்கு ஹேமா தகுதி பெற்றிருந்தாள். போட்டியில் கலந்துகொள்வதை விட கேரளாவைப் பார்ப்பதில்தான் அவளுக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. பயண அனுபவங்களையும் போட்டி முடிவுகளையும் பற்றி பேசுவதற்கு நிறைய இருந்தாலும் ஆபிதா, ஜைனாபீ மற்றும் ஃபாத்திமாவைப் பற்றி முதலில் பகிர்ந்து கொள்வதே சிறப்பு. கோழிக்கோட்டில் இது வரை அறிமுகமேயில்லாத ஆபிதாவின் வீட்டில் தங்குவதாய் ஏற்பாடு. (நன்றி முத்துக் கிருஷ்ணன்) கூடவே ஃபாத்திமாவின் குடும்பத்தோடு ஒரு அறிமுகமும் கிடைத்தது. இருவருமே சமூகச் செயற்பாட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். குடும்பத்தில் முக்கால்வாசிப்பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கிறார்கள்.
ஆபிதாவும் ஃபாத்திமாவும் ஃபாத்திமாவின் தாய் ஜைனாபீயும் நிறைய வாசிக்கிறார்க்ள். விவாதிக்கிறார்கள். அங்கிருந்தபோது ஃபாத்திமா Mario Vargas Llosa-வின் The Feast of the Goat-ஐ முடித்துவிட்டு Franz Kafka-வின் The Trials-ஐ வாசிக்கத் துவங்கியிருந்தாள். ஆபிதா சிறந்த மேடைப் பேச்சாளர். ஆபிதாவின் சகோதரர் தன்னை ஒரு சுமை தூக்கும் தொழிலாளி என்று பெருமை பொங்க அறிமுகப் படுத்திக் கொள்கிறார். ஃபாத்திமாவின் தாய் ஜைனாபீ ஆறரை அடி உயர சாந்தசொரூபி. வீட்டுக்குள் இருந்துகொண்டே செய்தித்தாள்களிலும் கணினியிலும் உலக நடப்புகளை அறிந்துகொள்கிறார்.
அந்த வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் இல்லை. முக்கியமாக குடும்பத்தில் யாரும் ஃபேஸ்புக்கில் இல்லை. தமது மதத்தைப் போலவே பிற மதங்களையும் மதிக்கிறார்கள். ஒரு போதும் பிற மதத்தை குறைத்தோ தாழ்த்தியோ பேசுவதில்லை. தனி மனித உணர்வுகளுக்கும் அவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கும் மிகுந்த மதிப்பும் அக்கறையும் காட்டுகிறார்கள். தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் நிறுவனத்திற்காக உழைக்கிறார்கள். ஃபாத்திமாவின் தாயைத் தவிர அங்கிருந்த அனைவரும் மேடைப் பேச்சாளர்கள்.
கோழிக்கோட்டுக்கு பயணம் செய்துவிட்டு மலபார் உணவுவகளைப் பேசாமல் இருந்தால் அது பெருங்குற்றம். இதோ தட்டச்சு செய்யும்போதே விரலினிக்கிறது. நாவினிக்கிறது. நம்மூர் பிரியாணிக்கும் நோன்புக் கஞ்சிக்கும் குதியாட்டம் போடும் நாக்கு அவர்களது மலபார் உணவு வகைகளுக்கு குத்தாட்டம் போட்ட கதையை என்னவென்று சொல்ல? சப்பாத்தி, தேங்காய் சேர்த்து செய்த ’வெள்ளையப்பம்’, அரிசிமாவில் இட்லி சைக்குக்கு தோசை கனத்திற்கு செய்யப்படும் ’பத்திரி’, நெய்யும் லவங்கப்பட்டையும் சேர்த்து சமைத்த சோறு, என அனைத்து உணவுகளையும் பெரிதாக இருந்த ஒரே தட்டில் அடுக்கியும் குவித்தும் பரப்பியும் வைத்திருந்த அழகே apetite-ஐக் கிளப்பியது. தொட்டுக்கொள்வதற்கு கடுக்கா கறி (கடற்காய்கள் எனப்படுகிற Salt water mussel), மீன் வகைகள், இறால், மாட்டிறைச்சி வரட்டியது, ஹமுஸ், என வகை வைகையாய்ப் பீங்கான் கிண்ணங்களில் சுற்றிலும் அடுக்கப் பட்டிருந்தன. எல்லோரும் சுற்றியமர்ந்து சாப்பிட்டோம். நான் ஆஸ்ஸம் அட்டகாசமாய் ஒரு பிடி பிடித்தேன்.
ஆபிதாவின் குழந்தைகள் காசியாவும் ஃபுர்கானும் ஹேமாவுக்கு பை நிறைய பரிசளித்தார்கள். கடற்கரைக்கும் கோளரங்கத்திற்கும் அழைத்துப் போனார்கள். பட்டம் விட்டார்கள். காசியா ஹேமாவிற்கு மலையாளம் கற்றுக் கொடுத்தாள். அங்கிருந்த ஒரு செயற்கைக் குளத்திற்கு அழைத்துச் சென்று வழக்கமாக ரசிக்கும் தாமரையையும் தவளையும் அறிமுகப்படுத்தினாள். பதிலுக்கு ஹேமா காசியாவிற்கு தமிழ் கற்றுக் கொடுக்க ஆங்கிலமும் மலையாளமும் தமிழும் அங்கே கபடி ஆடின. விடுமுறை கிடைக்கும்போது அடிக்கடி வரவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். தினமும் குறுஞ்செய்தி அனுப்பி நலம் விசாரித்துக்கொள்கிறார்கள்.
இதற்கு முன் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் கோழிக்கோடு வந்திருக்கிறேன். பணிநிமித்தம் வந்து விடுதிகளில் தங்கி உண்டு திரும்பிய நாட்கள் அவை. மரபு வழுவாத ஒரு உள்ளூர்க்காரரின் வீட்டில் அவரது குடும்பத்தாரோடு ஒரு உறவினரைப் போல தங்கி உண்டு களித்துத் திரும்பிய இந்த நாட்கள் முற்றிலும் வேறொரு அனுபவத்தைத் தருபவை.
மத நம்பிக்கையிலும் மொழியிலும் கலாச்சாரத்திலும் உடையிலும் உணவிலும் இருந்த வேறுபாடுகள் குறித்த எனது ஆரம்பக்கட்டத் தயக்கங்களை அவர்களது அன்பும் நட்பும் அக்கறையும் அடித்து நொறுக்கி அங்கிருந்த குப்பைக்கூடையில் போட்டன. கை நிறைய நட்போடும் மனம் நிறைந்த அன்போடும் ஊர்வந்து சேர்ந்தோம்.
ஆபிதயும் ஃபாத்திமயும் பின்ன ஞானும் இப்போள் கூட்டுகாரிகளாணு
நன்றி: Muthu Krishnan
No comments:
Post a Comment