Total Pageviews

Thursday, August 16, 2012

வாழ்க்கைக் கல்வி




கடந்த மூன்று மாதங்களாகத் தரவுகளுக்காக கிராமம் கிராமமாக சென்றுகொண்டிருக்கிறோம். நேற்றும் ஒரு கிராமம். எனது பள்ளித் தோழி அஞ்சலையைச் சந்தித்தேன்.பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிவிட்டதால் உடனேயே திருமணம். நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். முதல் பெண் பன்னிரண்டாவது படிக்கிறாளாம். ஹேமஸ்ரீ LKG(?). அஞ்சலையும் அவளது கணவரும் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். சொந்தமாக ஒரு வீடும் கொஞ்சம் நகையும் சேர்த்து வைத்திருப்பதாகவும். தனது மூத்த பெண்ணை ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்க வைக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெகு நாட்கள் கழித்த சந்திப்பு என்பதால் பள்ளி காலத்தில் செய்த சேட்டைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் (இங்கே சொல்வதற்கில்லை). இருவரது பேச்சும் தற்காலத்திற்குத் திரும்பியபோது, அஞ்சலை எனக்கு அறிவுரை கூற ஆரம்பித்திருந்தாள். வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனங்களை அனாயாசமாக அதே நேரம் அணித்தரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். நானும் பொறுப்பாகத் தலையாட்டிக் கொண்டே இருந்தேன். அவளது பேச்சின் விஸ்தாரமும், வீரியமும், உண்மைகளும் என்னைப் பேச்சற்றவளாக மாற்றியிருந்தன. அஞ்சலையின் வாழ்க்கை பற்றிய புரிதல்களும் சித்தாந்தங்களும் இது நாள் வரை வாழ்க்கையைப் பற்றிய எனது கற்பிதங்களை தவிடு பொடியாக்கின. அஞ்சலை மிக உயரத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.

அன்றைய மதிய உணவை அவள் வீட்டிலேயே முடித்து விட்டுக் கிளம்பி வந்து கொண்டிருந்த போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது, ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது ஸ்டடி பீரியடில் இதே அஞ்சலைக்கு நான் க்ரூப் லீடராக இருந்திருக்கிறேன். நான் சொல்லித் தரும் பாடங்களையெல்லாம் அவள் பொறுப்பாகக் கேட்டுக் கொண்டேயிருப்பாள். நேற்று நான் தலையாட்டிக் கொண்டிருந்தது போலவே......


No comments: