இன்று எங்கள் ஊரில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரசித்தி பெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் திருவிழாவின் கடைசி நாள். தேவராட்டம், சேவையாட்டங்களுடன் கூடவே கலர் பலூன்கள், பல நிறங்களில் சர்பத், பீம புஷ்டி ஹல்வா, ராட்டினங்கள், பொரி கடலை, வாணவெடிகள், லவுட் ஸ்பீக்கர் பாடல்கள், மொட்டைத்தலைகள், தீச்சட்டி... இன்னும், இன்னும்.......... சிறுவயதில் நான், சாந்தி, லதா, முருகேஸ்வரி, பாண்டி, ராஜ்குமார், எல்லோரும் திருவிழாவில் சுற்றி வருவோம். இரவில் பாட்டுக் கச்சேரிக்கு சாக்கு போட்டு இடம் பிடிப்பதும், பிடித்த நடிகர்கள் பாடல் வந்தால் விசிலடித்து கை தட்டுவதும் என ஒரே ரகளைதான். இந்த திருவிழாவில் லதாவையும் சாந்தியையும் தவிர எல்லாரும் அவரவர் குடும்பத்துடன் தனித்தனியே வந்திருந்தோம். நலம் விசாரித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது. சாந்திக்கு இன்றுதான் திருமணம், லதாவை இதய நோய்க் காவு கொண்டு ஐந்தாண்டுகளாகி விட்டன. இப்போது பாண்டியுடன் பேசுவதில்லை. குடும்பச் சண்டை (?). இந்தாண்டு பாட்டுககச்சேரி இல்லை. இருந்திருந்ததாலும் சாக்குப் போட்டு...., இடம் பிடித்து...., பொரி கடலை தின்று..., கைதட்டி...., விசிலடித்து............. நடக்கிற காரியமாகப்படவில்லை.
வருடத்திற்கு
வருடம் திருவிழாக் கூட்டம் அதிகனமானாலும் பரிச்சய முகங்கள் அதிகமாகவே இருந்தன. விடலைப் பருவத்தில் ரகசியமாய் ரசித்த முகங்களையும் காண நேர்ந்த தற்செயலில்
விஞ்சி நின்றது சிறு பரவசம், ஆனால் காதோர நரையும், குடும்பஸ்தர்களாகி விட்ட அன்னிய உணர்வும் மெல்லிய வலியைச் சொருகின
.
ஹேமஸ்ரீக்கு
பலூன் வாங்கிய மீதிச் சில்லறையில் வந்த பத்து ருபாய்த் தாள்கள் ஒன்றில் // நிலவே உன்னிடம் இந்த ரூபாய் இருக்கும் வரை நான் இருப்பேன்// என்ற கிறுக்கலான கையெழுத்து. இப்போது அந்த நிலவும் நிலவுக்குப்
பணம் கொடுத்தவரும் என்ன ஆகியிருப்பார்கள் என்ற கவலை...............(தேவைதான்). இதே போன்றொதொரு வாசகத்துடன் ஆனால் திருத்தமான
கையெழுத்துடன் ஒரு புத்தம்
புது ஐந்து ரூபாய் நோட்டை வெகு நாட்கள் நானும் மிகப் பத்திரமாய் வைத்த்ருந்தேன். இப்போது அது எந்தத் திருவிழாவிலோ....?
யார் கையிலோ...?
No comments:
Post a Comment